அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Sunday 10 October 2010

திரு.கடவுள்


இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன், பல சந்தேகங்கள், குழப்பங்கள் உங்களை  சூழ்ந்து கொண்டு "என்ன சொல்ல வர  " என்று என்னை திட்டினால், இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சரியாக உங்களை சென்றடைந்தது என்று அர்த்தம். சில தலைப்புக்கள் மகிழ்ச்சியடைய செய்யும் , பல தலைப்புக்கள் நமக்கு அறிவளிக்கும் இன்னும் சில லைப்புக்கள் சலிப்படைய செய்யும் ஆனால் இந்த தலைப்பு நிச்சியம் குழப்பும். அப்படி இது உங்களை பல வகைகளில் குழப்பினால் அதுவே இந்த தலைப்பின் வெற்றி .  என்ன குழம்ப தயாரா !!!


நீங்கள் உலகின் ஒப்பற்ற, அனைவரும் போற்றும் நபராக வேண்டுமா ? இந்த  கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். ! 



பிரபஞ்சம் எப்படி தோன்றியது அதை யார் தோற்றுவித்தார்கள், அந்த பிரபஞ்சம் எப்படி தானியக்க(Automatic) முறையில் இயங்குகிறது , நாம் வாழும் உலகம் எப்படி உருவானது  , அதில் உயிர் எப்படி உருவானது , அந்த உயிர் எப்படி இனங்களாக உருப்பெற்றது. இதற்கு நீங்கள் மிக சிறந்த விளக்கங்களை அனைவரும் ஏற்கும்வன்னம் கொடுத்தால் நீங்கள் தான் உலகின் ஒப்பற்ற சிந்தனையாளர் !  இந்த கேள்விகளுக்கு நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கமளித்தால் மத கொள்கையாளர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள், ஆன்மிக ரீதியாக  விளக்கமளித்தால் பகுத்தறிவாளிகள் உங்கள் பற்களை தட்டிவிடுவார்கள், ஆளவிடுங்கடா சாமி என்று ஒதுங்கி கொண்டால் கொள்கைகள் அற்ற கோமாளிகளாகி விடுவீர்கள். "என்னடா லூசு தனமா பேசுற நீ என்ன தான் சொல்ல வர " என்று திட்டினால் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த கட்டுரையில் உள்ளது  மேலே தொடருங்கள்.   



இன்று அனைத்தையும் அறிவியல் ரீதியாக பார்ப்பது என்ற சிந்தனை பரவலாக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் ரீதியான பார்வை சிறந்தது என்றாலும் அதுமட்டும் முடிவாகாது. ஏனென்றால் அறிவியலில்  பல மூட  நம்பிக்கைகள் உள்ளது.என்ன அறிவியலில் மூடநம்பிக்கைகளா !என்று உங்கள் புருவம் உயர்ந்தால் அதற்கு விளக்கங்கள் பல உண்டு . ஆன்மிகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் அப்பட்டமானவை அனைவரும் அறிந்து கொள்ள கூடியவை. ஆனால் அறிவியல் மூட நம்பிக்கைகள் மூடி மறைக்கப்பட்டவை அதன் முரண்பாடுகள் அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுபவை. ஏன் அறிவியல் மூடநம்பிக்கைகளை அனைவரும் அப்படியே ஏற்று கொள்கிறார்கள் என்றால்  நாம் அப்படியே பழக்கப்பட்டோம். ஒரு செயலை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது என்று சொன்னால் அதை மறு மொழியின்றி அப்படியே ஏற்றுக்கொள்வது நமது வாடிக்கையாகிவிட்டது.        



இன்னொரு மூடநம்பிக்கை என்னவென்றால் அறிவியலால் நிருபனம் செய்ய  முடியாதவற்றை அப்படியே மறுப்பது . உலகில் உள்ளவற்றுள் 99 சதவீதம்  அறிவியல் நிருபனம் இல்லாததுதான் அதற்காக அனைத்தும் பொய்யா ! அல்லது கற்பனையா! ஏனென்றால் இந்த உலகில் உள்ள ,உயிர் உள்ள, உயிர் அற்ற பொருட்களில் வெறும் 0.00000000000035 % (3 . 5 X 10 ^ -13 )  மட்டுமே நம்மால் காண முடியும் .இந்த மாதிரி ஒரு டொங்கு கண்ணை வைத்துகொண்டு அனைத்தையும் கண்ணால் பார்த்தால் தான் ஒப்புக்கொள்வேன், அனைத்தையும் பகுத்தறிவோடுதான் எடைபோடுவேன் என்றால் நம்மை போல முட்டாள்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது. 



அறிவியலால் நிரூபிக்கப்பட்ட அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்றால் அந்த நிருபனங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அறிவியலும் அறிவியல் அறிஞர்களும் அப்படி கூற மாட்டர்கள் அவர்களால் கூறவும் முடியாது.ஏனென்றால் அறிவியல் தன்னால் கண்டுபிடிக்க முடியாததை   அப்படியே ஏற்றுகொள்கிறது. ஏன் டார்வின் கொள்கைஅப்படியே ஏற்று கொள்ளப்பட்டது? , மற்ற எந்த கோட்பாடும் அறிவியலை மட்டும் முன்னிறுத்தவில்லை மாறாக கடவுளையும் சேர்த்து  முன்னிறுத்தியது. டார்வின் ஒருவரே பரிணாம கொள்கையை அறிவியலின் அளவுகோல் கொண்டு  பார்த்தார், அதனால் அது அப்படியே ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னாளில் டார்வின் கொள்கைகள் பல இடங்களில்  மண்ணை கவ்வியது  என்றாலும் பரினாமத்தை விளக்க வேறெந்த கொள்கைகளும் அறிவியல் ரீதியாக இல்லாததால் அது அப்படியே  ஏற்றுக்கொள்ளப்பட்டது. டார்வின் சொன்னார் தண்ணிரில் இருந்து உயிர்கள் தோன்றியது, அவை அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியது என்று. அவரின் " The Origin of Species " என்ற புத்தகத்தில் சொல்லியுள்ள இந்த விளக்கங்களுக்கு எந்த வித  முழுமையான சான்றுகளும் இல்லை. அவர் சொன்ன பல கருத்துக்கள் வெறும் அனுமானமே! அதற்கு ஒரு உதாரணம்: பல  வருடங்களாக  உயிர் இனங்களை செயற்கை இனப்பெருக்கம் மூலம் ஆராய்ந்து  வருகின்றனர் ஆனால்  அவைகளில் இருந்து மற்றொரு உயிரினம் தோன்றவேயில்லை(Evolution Mismatch), அவர் கொள்கைப்படி ஏதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், ஆனால் முடிவு பூஜியம் தான். 



முடிவிலி (இன்பினிட்டி) என்ற  குறியீட்டை கொண்டுதான் இயற்பியலில் பல சூத்திரங்கள் (Formula)  செயல்படுகிறது. ஆனால் அந்த இன்பினிடியை சரியாக விளக்க யாராலும் முடியவில்லை, இன்பினிடியை ஒரு கணித கோட்பாடாக விளக்க முடிந்ததே தவிர அதன் முழு வீ ரியத்தை யாராலும்   விளக்க முடியவில்லை. இன்று நாம் காணும் பல சூத்திரங்களுக்கு பின் இந்த இன்பினிட்டி ஒளிந்து உள்ளது , அந்த சூத்திரங்களை நாம் நடைமுறையில் பயன் படுத்தினால் முடிவுகள் துல்லியமாக உள்ளது என்பது விந்தை. மின் ஆற்றல்  எதை பொறுத்து  அமைகிறது என்று கண்டு பிடிக்க அறிவியலாளர்கள் இன்பினிட்டியை உபயோகபடுதுகின்றனர். இன்பினிட்டி என்றால் எல்லையற்ற என்று பொருள்; நாம் உருவாக்கும் மின்சாரம் ஒரு எல்லையுள்ள தன்மை கொண்டது; எப்படி எல்லையற்றதை கொண்டு ஒரு எல்லைக்குட்பட்டதை அளக்க முடியும் ? எளிமையாக சொன்னால் ஒரு வண்டியின் இயக்கத்தை மதிப்பிட அந்த வண்டியின் என்ஜின்னின்  சக்தி பற்றிய அறிவு தேவை . அதேபோல் இந்த உலகில் உள்ள  எந்த சக்தியை அளவிடவும் இந்த உலகத்தின் இயக்க சக்தி பற்றிய அறிவு தேவை; ஆனால் இந்த உலத்தின் இயக்க சக்தியை யார் அறிவார்கள் ? எனவே அதை இன்பினிட்டி அல்லது அளவிடமுடியாதது   என்று கூறலாம் . எனவே தான் அணு ஆற்றல் தொடங்கி பல இயற்பியல் தத்துவங்களின் அளவீடுகளில் இந்த இன்பினிட்டி பயன் படுத்தப்படுகிறது.   இன்பினிட்டியை  முழுமையாக அறிய அறிவியல் தவறிவிட்டது ஆனால் அதை அப்படியே உபயோக படுத்துகிறது, எனவே அறிவியல் அனைத்தையும் நிருபித்து பின்பு ஏற்றுக்கொள்ளும் என்ற வாதம் அர்த்தமற்றது.  



பிறந்த பசுக்கன்று எப்படி தன் தாய் மடியை தேடி ஓடுகிறது, எத்தனை தலைமுறையாக பறவையினம் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டாலும் கூண்டில் இருந்து வெளிவந்தால் அது பறக்க தானாகவே கற்றுக்கொள்ளும் அது எப்படி, உலகின் எடை எப்படி மிக சமமாக நிருவகிக்கப்படுகிறது, எப்படி இந்த பிரபஞ்சம்  தானியங்கியாக இயங்குகிறது  போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அனைவராலும் ஒப்புக்கொள்ளும் விளக்கங்களை அறிவியலால் தர முடியாது.அறிவியலை மட்டும் அளவுகோலாக கொண்டு அனைத்தையும் பார்ப்பது மெத்த  மூடதனமே !  



சரி நான் கட்டுரையின்  தொடக்கத்தில்   கேட்ட கேள்விகளுக்கு பல பதில்களை பல முறைகளில் தேடினேன் ஆனால் அந்த பதிலை தந்தது கபிலர் என்ற ஞானி . அவர் அருளியதுதான் சாங்கியம் , இந்த பிரபஞ்சத்தை பற்றிய பல கேள்விகளுக்கு அனாயசமாக பதிலளிக்கிறார்   கபிலர் . இதோ அவரின் உதவியுடன் எனது சில விளக்கங்கள் .



            1 . நாம் இந்த உலகத்தை நம் கண்களால் காண்கிறோம்   அதாவது மனிதன் என்ற உயிரினம் இந்த உலகத்தை தன் அறிவால் காண்கிறது. நம்  மூலையின் இயக்க திறன் ஒரு எல்லைக்குட்பட்டது ஆனால் நாம் விளக்க துடிக்கும் இந்த பிரபஞ்சம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. எலி ஒரு கல்லை தூக்க எண்ணி   அது முடியாமல் போனால் அந்த கல் தூக்கமுடியதது என்று சொல்லுவது எவ்வளவு நகைப்புக்குரியது . அது போல் தான் நம் எல்லைக்குட்பட்ட அறிவை வைத்து எல்லையில்லா பிரபஞ்சத்தை அளப்பதும்.



            2. மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் ஒரு பொருள், மிருகங்களுக்கு வேறு மாதிரியாக தெரியலாம். நாம் இன்று காணும் இந்த பிரபஞ்சம் மனிதனின் பார்வை, அது மற்ற உயிரினங்களின்   பார்வையில்   இருந்து நிச்சியம் மாறுபடும். அளக்க முடியாத உயிரினங்கள் கொண்ட இந்த பிரபஞ்சத்தை மனிதர்கள் பார்வையில்  மட்டும்  புரிந்து கொள்ள நினைப்பது மூடத்தனமானது.   



             3 .நம் கண்களை பறித்தால் நம்மால் பார்க்க முடியாது , நம் செவிகளை பறித்தால் நம்மால் கேட்க முடியாது , நம் உணர்ச்சி  நரம்புகளை  பறித்தால் நம்மால் உணர முடியாது, நம் நாக்கை பறித்தால் நம்மால் சுவைக்க முடியாது, நம் மூக்கை பறித்தால் நம்மால் வாசனைகளை பகுக்க முடியாது. இப்படி புலன்களை நம் உடம்பில் இருந்து எடுத்துவிட்டால் நாம் இந்த பிரபஞ்சத்தை வேறு மாதிரியாக  உணரலாம் . நாம் ஒரு பொருளை பற்றி நினைப்பது அனைத்தும் இந்த புலன்களின் உதவியால் தான். இந்த புலன்களின் செயல்பாடுகள் உயிரினத்திற்கு உயிரினம்  நிச்சியம் மாறுபடும். எனவே அணைத்து உயிரினங்களுக்கு  பொதுவான இந்த பிரபஞ்சத்தை நம் புலன்களை கொண்டு மட்டும் அளக்க முடியாது.    



            4 .எனவே இந்த பிரபஞ்சத்தை பற்றிய சரியான செயல் வடிவத்தை பெற நாம் புலன்களை கடந்து செல்ல வேண்டும். அது அறிவியலில் நிச்சியம் முடியாது. ஏனென்றால், அறிவியல் என்பது நம்முடைய அறிவின் வெளிப்பாடு மட்டுமே ! புலன்களை கடந்த செயல் வடிவம் பெற இந்த பிரபஞ்சத்தின் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கபிலர் .  



            5. ஆதியில் இருப்பது இரண்டே இரண்டு தான் அவை உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material ) இதன் வித விதமான கலப்பு தான் இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கிறது என்று வாதிடுகிறார் கபிலர். உலகில் உள்ள அனைத்து உயிரினமும்   தோன்றியது    இந்த ஆதி பொருட்களின் வித விதமான கலப்பில்தான் என்கிறது கபிலரின் மொழிகள் . இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடு என்று நாம் நினைப்பது , உணர்வது பலதும் அடிப்படையில் வேறொன்றாக இருக்கலாம் அல்லது வெறும் மாயையாக (Illusion )  கூட இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தை முழுமையாக அறிய இந்த புலன்களின் அமைப்பை விட்டு விட்டு மீண்டும் உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material  ) என்ற ஆதி நிலையை அடைய வேண்டும் என்று கூறுகிறார்.எனவே இந்த பிரபஞ்சம் உருவாக்க பட்டது அல்ல உருவானது என்று கர்ஜிக்கிறார் கபிலர்.  



       கபிலர் சொல்லும் வரைமுறை ,அவரின் பார்வை, அனைத்தும் கடவுள்   என்ற ஒருவர் இந்த உலகத்தை உருவாக்கவில்லை  என்று வாதிடுவது. ஆனால் இந்த பிரபஞ்சத்தை எவன் ஒருவன் முழுமையாக உணர்கிறானோ அவனே கடவுள் என்பதும் வேறு பிற ஞானிகளின் கருத்து.  கபிலர்  குறிப்பிடும் ஆதி  தத்துவங்களான  உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material ) எப்படி தோன்றியது என்று கேட்டால்    அதற்கு பலரும் கடவுள் என்றே  பதில் உரைக்கிறார்கள் . 



எனவே இந்த பிரபஞ்ச ஆராய்ச்சி என்பது சோதனை கூடங்களில் செய்யவேண்டியது இல்லை மாறாக  நம்மை நாமே உணர்வது . ஏனென்றால்  இந்த பிரபஞ்சத்தின் மூல கூறுகள் ( உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material )  ) நம்மிடமே உள்ளது . அந்த ஆதி   கூறுகள் உயிர் உள்ள, உயிரற்ற அணைத்து பொருட்களிலும் வியாபித்திருக்கிறது என்பதே அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அந்த ஆதி கூறுகளை கடவுள் என்றால்  இந்த உலகில் உள்ள அணைத்து பொருட்களிலும் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். 



நம்மை நாமே உணர்வதற்கும் , மனிதனின் அடிப்படை உணர்வுகளை நெறிப்படுத்தி  அதை வகைப்படுத்த ஏற்பட்டதே மதங்கள். அந்த மதங்களை சரியாக பாதுகாக்க , புரிந்து கொள்ள , அவற்றின் அடிப்படையை  காக்க நம் முன்னோர்கள் ஒருவரை உபயோக படுத்தி கொண்டார்கள்  அவர் தான் திரு .கடவுள் .

   
பிரபஞ்சம் பற்றி சந்தேகங்கள் , கேள்விகள் இந்த உலகில் இருக்கும் வரை திரு. கடவுள் இருந்து கொண்ட இருப்பார். நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் அவர் நம்மில் இருப்பார். கடவுளை மறுக்க வேண்டும் என்றால், முதலில் இந்த பிரபஞ்ச சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும். அப்படி பதிலளித்து இந்த பிரபஞ்சத்தை நீங்கள் உண்மையாக கபிலர் சொன்னபடி உணர்ந்து கொண்டால், நீங்கள்  கடவுள் என்று ஒருவர் இல்லை என்று நிருபிக்கலாம் .  ஆனால்  அப்படி நீங்கள் நீருபிக்கும் நிமிடம் முதல் நீங்கள் கடவுளாக மாறியிருப்பிர்கள் என்பது நிச்சியம் .   



திரு.கடவுள் இந்த உலகின் தவிர்க்க முடியாத ஒரு குறியீடு .

Tuesday 28 September 2010

இது என்ன ஸ்டைல்


பொதுவாக எனக்கு திரைப்படங்களை பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் எழுதுவது அல்லது பதிவு செய்வது பிடிக்காது. எனக்கு அபிமான நடிகர் என்பவர் என்னை தன் திறமையால் ஒரு வகையில் கவர்கிறார்.அதற்கு அவர் நடித்த திரைப்படத்தை பணம் கொடுத்து பார்க்கிறேன், அவ்வளவே எனக்கும் அவருக்கும் உள்ள உறவு. அதற்கு அவரை கொண்டாட தேவையில்லை, நாம் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் ஒரு வெங்காயத்தையும் கிழித்துவிடவில்லை.   சமிபகாலமாக எந்திரன் படத்தை பலர் சன் பிச்சருடன் போட்டி போட்டு இணையதளம் வாயிலாக விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு மின் அஞ்சல்  எந்திரனையும், ரஜினியையும் கடவுள் என்று புலம்புகிறது, அதற்கு போட்டியாக மற்றொரு மின் அஞ்சல் எந்திரனின் வண்டவாளங்களை சாடுகிறது. யாராவது இணைய தள வாயிலாக தங்கள் நேரத்தை வீன்செய்ய விரும்பினால் எந்திரன் சம்பந்த பட்ட மின் அஞ்சல்களை படித்து பயனடையலாம்.ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை, அவரை ரசிக்காதவர்கள் யாரும்மில்லை. ஆனால் அவர் நாம் வாங்கும் டிக்கெட்டில் சம்பாதிக்கும் ஒரு சாதாரண மனிதர். அவரை தனிப்பட்ட முறையில் புகழ ஏதாவது ஒரு காரணத்தை சொன்னால் என்னை போன்றோர்களும் ரஜினியை தலைவர், கடவுள், மாமனிதர், மகாத்மா  என்று ஒப்புக்கொள்வோம்; ரஜினியை யாராவது திட்டினால் நாங்களும் திருப்பி அவர்களை திட்டி , கேலி செய்து   மின் அஞ்சல்கள் அனுப்ப தயாராக உள்ளோம் என்பதையும்  தெரிவித்து கொள்கிறேன்.      

எந்திரனால் இந்தியா அடைந்த நன்மைகள்  :


  1.  இந்தியாவில் சமத்துவத்தை மலர செய்தது 
  2. அயோத்தி பிரச்சனையை திர்த்து வைத்தது
  3. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியது 
  4. காஷ்மீர் சச்சரவை தீர்த்தது 
  5. அத்தியாவிசிய  பொருட்கள் விலையை குறைத்தது 
  6. சீனாவின் மறைமுக  மிரட்டலை முடிவுக்கு கொண்டுவந்தது.



Picture
எந்திரனுக்கு பாலபிசேகம் செய்வது போன்ற படங்களை பத்திரிக்கைகளில் பார்த்தேன். அந்த செய்தியை பார்த்த  ஒரு  முதியவர் சொன்னதை   அப்படியே சொல்கிறேன், " து என்ன  மானங்கெட்ட பொழப்பு டா இது  , போய் பொழப்ப பாருங்கடா " . என்று அவர் சொன்னார், மத்தபடி எனக்கும்  இதுக்கும் தொடர்பில்லை.

குறிப்பு :
பாலபிசேகத்தை  பற்றி பெரியவர் சொன்னது  தலைவர், தல, இளைய தளபதி அனைவருக்கும் பொருந்தும்.(மக்களே!  இந்த பலி பவத்தூக்கல்லம் நா ஆளாக மாட்டேன் !)

" தான் பேட்டிகள் கொடுப்பதில்லை  என்று அவரே சொன்னார், பின்பு எந்திரன் மிகப்பெரிய படம் என்று வீடு  வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறார்", மிக சிறந்த தலைமை பண்பு !!!! இவரை பின்பற்றும் தொண்டர்களும் இவரை போலவே இருப்பார்கள் போல!!!! நல்ல தலைவர் ! நல்ல தொண்டர்கள் ! சுத்த கிறுக்குபிடித்த கூட்டம் ........

நிச்சயம் ரஜினி சம்பாதித்தது இந்த  வெறிபிடித்த ரசிகர்களால் அல்ல, நாகரிகமான குடும்ப ரசிகர்களால். அதனால் தான் ரஜினி தெளிவாக இந்த வெறி பிடித்த முட்டாள் கூட்டத்தை தன் அருகே சேர்பதில்லை, தன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் உபயோக படுத்தி கொள்கிறார்.அவர் கட்சி தொடங்க மறுப்பதின் முக்கிய காரணம் இந்த வெறி பிடித்த முட்டாள் ரசிகர்கள் அவரை  மிஞ்சி போனால் ஒரு சீட்டில் வெற்றி பெற வைப்பார்கள். அவரின் நாகரிகமான குடும்ப ரசிகர்கள், அவரை ஒரு நடிகராக மட்டும் கருதி மற்ற தொகுதிகளில் ஆப்பு வைப்பார்கள். ரஜினி தன் பண பாதுகாப்பில் மிக கவனமாக இருப்பார். ("டேய் இது மலைக்கு மல டைவடிச்சி சம்பாதிச்ச காசுட " என்று கவுண்டமணி சொன்னது  ரஜினிக்கு சரியாக புரிந்திருக்கிறது ").ரஜினி மிக புத்திசாலிதனமாக இந்த முட்டாள் ரசிகர்களை வைத்து இலவசமாக கட் அவுட் வைத்து , பாலபிசேகம் செய்து , மின் அஞ்சல் அனுப்பி தன் படத்தை புரோமோட்  செய்து சம்பாதிக்கிறார். முடிந்தால் அவரை இந்த முட்டாள் தனமான சடங்குகளை நிறுத்த சொல்லுங்கள் பார்க்கலாம். நிச்சியம் மாட்டார் !!!

நீங்க என்ன சொன்னாலும் எந்திரன் விஸ்வருப வெற்றி, எனவே எந்திரனின் ரசிகர்கள் செய்வதை மக்கள் ஏற்று கொண்டார்கள் என்று  சொன்னால் உங்களுக்கு ஒரு ரெடிமேட் பதில் ! தினமும் டாஸ்மாக்கில் எக்கச்சக்க கூட்டம் அதனால் மக்கள் அனைவரும் டாஸ்மாக்கை அரசே  நடத்துவதை அங்கிகரிப்பார்களா!!!!     

Sunday 22 August 2010

வேலை இருக்கு ஆனா இல்ல


  

Picture

  சுரண்டிப்பிளைப்பவன்  ஏழ்மை பற்றி பேசுவதும் , இன்றைய  அரசியல்வாதி நேர்மைபற்றி உரைப்பதும் , வெயிலில் கருப்புசட்டை அணிந்து  பகுத்தறிவு பறைசாற்றுவதும் , தமிழ் வாழ்க என்று ஆங்கிலத்தில் முழங்குவதும் எவ்வளவு  கேளிக்குரியதோ அவ்வளவு நகைப்பிற்குரியது இன்றைய கல்வியாளர்கள் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசுவதும். தற்பொழுது  உள்ள வேலையில்லா திண்டாட்டத்திற்கு   மிகப்பெரிய  காரணம் இன்றைய   கல்வியாளர்களும், அரசாங்கமுமே! 1970 மற்றும் 80 களில் இந்தியா  சந்தித்த வேலையில்லா பிரச்சனைக்கும் இன்றைய பிரச்சனைக்கும் மிகப்பெரிய வேற்றுமை     உண்டு. அன்று வேலையில்லை ஆனால் படித்தவர்கள் இருந்தனர் ஆனால் இன்று தகுதியான வேலைகள் பல உண்டு ஆனால் படித்தவர்களில் தகுதியானவர்கள் இல்லை.தெளிவாக சொன்னால் இன்றைய இந்தியாவின் சவால் வேலையின்மை அல்ல வேலையை பெற தகுதியின்மையே!  India's   problem  is  not  unemployment , its  is unemployability ! 

இதைப்பற்றி சொன்னவுடன் வேலை பெற தகுதியின்மைக்கு எப்படி கல்வியாளர்களும், அரசாங்கமும் காரணமாக முடியும். இதல்லாம் சுத்த பிதற்றல் நல்லா படிச்சா வேலை கிடைக்க போகிறது இல்லையென்றால் இப்படி வேலையில்லாம அலைய வேண்டியதுதான்  என்ற சத்தங்கள் என் காதுகளில் விழுகிறது.ஆனால் வேலை பெற தகுதியுள்ளவர்கள் மட்டும் பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை, வேலை பெற தகுதியற்றவர்களும் பட்டங்கள் பெற்றவர்களே! அதெப்படி ஒரே பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கும் ஒருவன் வேலை பெற தகுதியுடையவன், மற்றவன் தகுதியற்றவன்   என்று என்னை போன்ற படித்த முட்டாள்கள் கேள்விகள் கேட்க கூடும்? அதற்கும் சில ஆயத்த (ரெடிமேட்) பதில்களும்   உண்டு அவை "ஒருவன் நல்லா படிச்சவன் இன்னொருத்தன் சரியாய் படிக்காதவன் ". அப்படியிருந்தாலும், சரியா படிக்காதவனுக்கு எப்படி பல்கலைகழகங்கள் பட்டதை வழங்குகின்றது? என்ற கேள்விகள் தமிழக அரசின்  இலவச திட்டங்கள் போல தொடரும்.

டைம்ஸ் ஒப் இந்திய மற்றும் NASSCOM (National Association of Software and Services Companies) போன்ற நிறுவனங்களின் புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில்  75 %  பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். அழுத்தமாக சொல்லுகிறேன் 75 % பொறியியல் பட்டதாரிகளும் முறையாக நான்கு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றவர்கள்.எனவே ஒரு செய்தி இதில் இருந்து தெளிவாகிறது இந்திய பல்கலைகழகங்கள் வேலைக்கு தகுதியான பட்டதாரிகளை உருவாக்குவதில்லை  மாறாக புத்தக எழுத்துக்களை விடைத்தாளில் மாற்றம் செய்யும் மனித அச்சகங்களை மட்டும் பெருமளவு உருவாக்குகிறது. மேலும் பாடங்களை  உருவாக்குவதற்கும்,    இணைப்பு கல்லூரிகளை     மற்றும் பல்கலைகழகங்களை  கண்காணிப்பதற்கும் , முறைபடுத்துவதற்கும் AICTE , UGC  மற்றும் NCVT போன்ற  அரசு நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றது. இது அறுவை சிகிச்சை வெற்றி!  இருந்தும் நோயாளி மரணம்!  என்ற நிலையைத்தான் சுட்டுகிறது .  

ஒவ்வொரு வருடமும் 750000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு  5 %   என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 1500000க்கும் அதிகம். இப்படியிருக்க கதைக்குதவாத இந்த கல்வி முறைகளை உடனடியாக மாற்ற வேண்டும், இல்லையென்றால் இந்த பாரத சமுதாயம்  கெட்டு சீரழியும்.இந்த பாதிப்புக்கள் இன்றைய தலைமுறையை மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறையையும்  மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும்.இந்தியாவில் 13 - 23 % சதவிதம் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர் என்ற செய்தி மேலும் ஒரு குண்டை நம் தலையில் ஏற்றுகிறது(குறிப்பாக எத்தனை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று அவர்களே ஒப்புக்கொள்வார்கள் ). தகுதியில்லா ஆசிரியர்களுக்கு காரணம் தகுதியற்ற  கல்வி முறை .  தகுதியற்ற  ஆசிரியரிடம் கல்வி கற்ற ஒருவன் தகுதியற்று  படித்து முடிப்பான்.  இதுவே இன்றைய அவலம்.   

சரி இப்படி தகுதியற்று படித்து முடிப்பவர்கள் வாழ்வு வீண் தானா என்றால் அது நிச்சியம் இல்லை. இந்திய மாணவர்கள் பிறவியிலேயே சிறந்த புத்தி கூர்மை படைத்தவர்கள் எனவே பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொண்டு   சிறந்த வேலை பெறுவதாக ஒரு அறிக்கை சொல்லுகிறது. இப்படி சுயம்புவாக படிப்பதற்கு பல்கலைகழகங்கள் எதற்கு?,இந்த கல்வி கட்டமைப்பால் என்ன பயன்?, என்ற  கேள்விகள் மனதில் கோபத்தை வளர்க்கிறது.

2007 ஆம் ஆண்டு டீம் லிஸ் (Team Lease) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் வேலையற்றவர்களில்   1  கோடி பேருக்கும் வேலையுள்ளவ்ர்களில் 7.4  கோடி பேருக்கும்   திறன் செப்பனிடல் தேவை என்று கூறுகிறது. மேலும் திறன் செப்பனிடல் பணிக்கு அரசாங்கம் 4 ,85 ,640 .00 கோடி செலவு செய்தால் அதன் மூலம் 17 ,51 ,487 .00 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்கிறது,. அரசாங்கம் சரியான கல்வி சூழலை அமைத்திருந்தால் திறன் செப்பனிடலின் தேவையும், வருவாய் இழப்பும் இருந்திருக்காது, இது செத்த பிணத்திற்கு பால்வார்க்கும் முயற்சியே!. உலகில் அணைத்து நாடுகளும் தவமிருந்தாலும் கிடைக்காத வளம் மனித வளம் அந்த வளம் இந்தியாவிடமிருந்தும் அதை சிறப்பாக பயன்படுத்தாமல் வீணாக்கி கொண்டிருக்கும் அரசாங்கம் குற்றக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியதே!  

அரசாங்கம் கல்வி திட்டத்தை    மாற்றுவது உடனடியாக நடக்காது எனவே இந்த பாதிப்பிலிருந்து நீங்க நான் சொல்லும் சில வழிமுறைகள் :   

1. பிடித்த துறையை கண்டு அதை படிப்பதால் பாடத்திட்டத்தையும்  தாண்டி நம் திறன் வளரும்
2. வேலைவாய்ப்பையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தை    நிறுத்தவேண்டும் .   
3. BE , MBBS  மட்டுமே படிப்புகள் மற்றவை வெறும் துடுப்புகள் என்ற மனநிலை மாற வேண்டும்.எனக்கு தெரிந்து பல ஓவியர்கள் , சிறந்த கலை திறமை கொண்டவர்கள் BE படித்து தங்கள் பிறவி திறமையை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். 
4. படிப்பு என்பது பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது
5.பணத்திற்கு படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் குணத்திற்கு படியுங்கள்.

 உங்கள் உள்ளம் எதை செய்ய தூண்டுகிறதோ அதை படியுங்கள் வேலை நம்மை தேடிவரும்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு,
முதலில் உங்களின் தனித்திறமையை உணருங்கள் பின்பு அதை நோக்கி உங்கள் பாதை  அமையட்டும். உங்கள் பாதை நீங்கள் படித்ததற்கு தொடர்பில்லாமல் இருந்தாலும் தவறில்லை. உங்கள் திறமை என்பது வைரம் போன்றது  படிப்பு என்பது வைரத்தை வைக்கும் பெட்டி போன்றது. வைரத்தால் தான பெட்டிக்கு மதிப்பே தவிர பெட்டியால் வைரத்திற்கு மதிப்பல்ல.   


                  வாழ்வில் சவால்களை சந்திப்பவன் மனிதனாக இருக்கிறான் ! 

     சவால்களையே வாழ்க்கையாக கொண்டவன்  சரித்திரம் படைக்கிறான்  !

Friday 20 August 2010

உலகின் மூத்தக்குடி


 "இந்தக்கட்டுரை  மிளகையும் அரிசியையும் சேர்த்து செய்யும் பொங்கலைப்   போல  வரலாற்றையும், பூகோளத்தையும் கலந்து எழுதப்பட்டது. இதை படிக்கும் (சாப்பிடும்) போது உங்களுக்கு தூக்கம் வரலாம் அதை தவிர்த்து  கட்டுரையை   நீங்கள் படித்து முடித்தால்   உங்கள் முதுகெலும்பு உங்களை  அறியாமல் நிமிர்வதை உணரலாம்" 


Picture


இந்திய வரலாறு வெள்ளையர்களுக்கும்   மற்றும் பிற  வெளிநாட்டவர்களுக்கு  கற்பனைகளை புகுத்தும் களமாகவும் , தங்கள் ஆதிக்க எண்ணங்களை வெளிப்படுத்தும்  உறைவிடமாகவும்  இருந்துவந்தது. அவர்கள் கருத்துப்படி இந்தியர்களுக்கு எந்த தொன்மையான  வரலாறும் இல்லை, இந்திய நாகரிக வரலாறு என்பது பாரதீய புராணங்களில் வருவது போல  10000 வருட பழமையானது என்பது வெறும்  கட்டுக்கதை என்றே கருதிவந்தனர்.இந்திய புராணங்கள் அனைத்தும் கற்பனையே, வேதங்கள் அனைத்தும் சொற்ப பழமையானதே என்ற  புதிய சித்தாந்தங்களை பரப்பினர்.அந்த சமயத்தில் பல இந்தியர்கள் அதை எதிர்த்தனர் ஆனால் அவர்களும் வெள்ளையர்களின் விஞ்ஞான தத்துவப்படி நிரூபணம் செய்யமுடியாமல் தவித்தனர். பாரத வரலாறே வெள்ளையர்களின் திட்டமிட்ட அட்டவணை ஆகிவிடுமோ, நம் உண்மை வரலாறு கற்பனைகளாகவும், நம்பிக்கையாகவும் புதைந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த  நேரத்தில் நம்மை காத்ததுதான் ஹரப்பா, மொஹெஞ்சதரோ போன்ற புராதான  நகரங்களின் கண்டுபிடிப்பு .



கிபி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால்  மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டது , அது சிந்து நதியின் அருகாமையில்  இருந்ததால் அதற்கு அவர் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று  பெயரிட்டார். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா(Harappa) நகரம் , லோதல்(Lothal) நகரம் என்று  சிறியதும் பெரியதுமாக 2600 க்கு  மேற்பட்ட கட்டிட பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவை மேற்கே ஈரானுக்கு இடையிலும் , வடக்கே துர்க்மேனியா,பக்த்ரியா மற்றும் பமிர்ஸ் வரையும்,கிழக்கே மேற்கு உத்தர பிரதேஷ் வரையும் , தெற்கே மகாராஷ்டிராவில்  உள்ள  கோதாவரி வரை நீண்டு , வடிவேலு சொல்வது போல் "அம்மாடி எத்த தண்டி " என்று சார்.ஜான் மர்ஷலே சொல்லும் அளவுக்கு நீண்டதொரு நெடும் கலாச்சார அமைப்பாக திகழந்தது.      



இந்த மாபெரும் கண்டுபிடிப்பு பாராட்டுக்களுடன்  பல சந்தேகங்களையும் கிளப்பியது.இந்த நகரங்கள் எப்படி அழிந்தது அவை ஆர்ய படையெடுப்பில் அழிந்ததா அல்லது இயற்கை சீற்றங்களால் அழிந்ததா என்று அனைவரையும் மண்டையை பிக்க வைத்தது.இந்த கண்டுபிடிப்புகளுக்கு பின் வேத பாடல்களின் மேற்கோள்களும் , கண்டுபிடிக்கப்பட்ட இடங்களும்  ஓரளவு ஒத்துவந்ததால்   இந்த ஆதாரங்கள்  அனைத்தும் சிந்து சம வெளி நாகரிகம் மிக மிக தொன்மையான நாகரிகம் என்றும் , அதன் கட்டிடக்கலை     இன்றளவும் வியக்கத்தக்கது  என்றும் உலக அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது   . சும்மா சொல்லக்கூடாது, நம்மவர்கள் 5000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பு குளங்கள் ,கிணறுகள்,குளியல் அறைகள்,திட்ட மிட்ட சாலைகள், மிக உயர்ந்த வியசாய முறை , நிர்வாகம்,கலை , எழுத்து வடிவம் ,ஒழுங்கான சாக்கடை வசதி என்று அநியாயத்துக்கு அசத்தியிருந்தனர். இதை பார்த்த வெள்ளையர்களுக்கு தங்கள் டங்குவார் அறுந்து விட்டது போல் இருந்தது, இருக்காதா பின்னே! இந்தியர்கள் இந்த சாதனைகளை செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளையர்கள் அம்மணமாக காட்டில் அல்லவா அலைந்து கொண்டிருந்தனர்.    



இதற்கு பின்பும் ஏதோ குறைவது போல் தெரிந்தது, இந்திய நாகரிகம் பழமையானது என்று நிரூபணம் ஆகிவிட்டது இருந்தும் வேதங்களில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதி எங்கே!. அப்படி ஒரு நதி உண்மையிலே இருந்ததா?, அல்லது வெறும் கற்பனையா!, என்றல்லாம்  பலர் மண்டையை உடைத்து கொண்டிருந்தனர். வேதங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் தற்போது இருந்தாலும் இந்த சரஸ்வதி நதி எங்கே போனது?ஏன் அனைவரும் சரஸ்வதி நதியை இவ்வளவு முக்கியத்துவம்   கொடுத்து தேடினர்?, போன்ற ஐயங்கள்  நம் மனதில் எழலாம், ஏனெனில்  இந்திய புராணங்களில் சரஸ்வதி நதிக்கரை மிக பிரசித்தம். அவ்வளவு ஏன் மகாபாரத யுத்தம் கூட சரஸ்வதி நதிக்கரையிலே நடந்ததாக மகாபாரதத்தின் ஆசிரியர் வியாசர் குறிப்பிடுகிறார்.  வேதங்களும் சரஸ்வதியை   நதிகளின் தாய் என்று வர்ணிக்கிறது.  எப்படியோ சரஸ்வதி நதி மட்டும் கண்டுப்பிடிக்கப்பட்டால் நம் இதிகாசங்களும் , புராணங்களும் உண்மையே! என்று மெய்பிக்க முடியும், அதற்கு மேலாக ஆரிய படையெடுப்புக்களின் உண்மை தன்மையை  உலகுக்கு உணர்த்த முடியும் என்ற எண்ணம் இந்திய வரலாற்று ஆர்வலர்களிடம் இருந்தது.   



இதற்கெல்லாம்  தீர்வாக அமைந்தது 1970 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு செயற்கைக்கோள்   எடுத்த  படம். அந்த படத்தை பார்த்த நம் நிலவியலாளர்களுக்கு  புதிய சரித்திரம் பிறக்க போகிறது என்ற நம்மிக்கை பிறந்தது. அந்த படம் மேற்கு மற்றும் வடக்கு இந்தியாவில்  பல நூற்றாண்டுகளுக்கு    முன்பு மறைந்த நீர் தொடர்களை பற்றி தெளிவாக விளக்கியது. இது மறைந்த சரஸ்வதி நதியின் நீர் படலங்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டது .    பின்பு சரஸ்வதி நதியின் முழு  வரைபடமும் தயாரிக்க பட்டு சரஸ்வதி நதியை தேடும் படலம் 1982  ஆம் ஆண்டு தொடங்கியது . இதற்கிடையில் பாபா அணு ஆராய்ச்சி மையம் 1995  ஆம் ஆண்டு வெளியிட்ட   அறிக்கையில் ராஜஸ்தான் பாலைவனத்தில்  50  - 60 மீட்டருக்கு அடியில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .  கண்டுபிடிக்கப்பட்ட  நீர் வளம் பாலைவனத்தில் கோடை காலங்களில் கூட விவசாயம் செய்ய போதுமானது என்று அந்த அறிக்கை மேலும் ஆச்சிரியத்தை கூட்டியது.(ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வளம் சரஸ்வதி நதியின் நீரோட்டம் என்றும், சரஸ்வதி நதி தற்போது உள்ள தார் பாலைவனத்தின் வழியாக ஓடியது என்றும் அப்போது அது பாலைவனமாக  இல்லை என்றும் பின்பு அறிஞர்கள் விளக்கியது குறிப்பிடத்தக்கது)   



சரஸ்வதி நதியின் வழித்தடம் மிகவும் சுவாரசியமானது அது கைலாஷ் மானசரோவர் மலை பகுதியில் தொடங்கி சிவாலிக் கால் தடங்களில் ஓடி பின்பு ஹிமாலயத்தை அடைந்தது ஹர்யான மாநிலத்திலுள்ள க்ஹ்கர்  பள்ள தாக்கு வழியாக ராஜஸ்தான் பாலைவனம்    மற்றும்  பாகிஸ்தானில் உள்ள சோலிஸ்தான் பாலைவனம் வரை நீண்டு  பின்பு நாரா பள்ள தாக்கு வழியாக அரபிக்கடலை  அடைகிறது. இந்த நதியின் வழி தடத்தை  ஆராய்வதன் மூலம் சரஸ்வதி நதி சிந்து நதியின் இணை கோடாக ஓடியது புலப்படுகிறது.சரஸ்வதி நதிக்கும் சிந்து நதிக்கும் இடைப்பட்ட இடத்தில் தான் ஹரப்பா, மொஹெஞ்சடரோ போன்ற கலாச்சார அமைப்புகளும் இருந்தது. நாம் முன்பு கண்டது போல சிந்து சம வெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட   2600 பகுதிகளில் 2000க்கு  மேற்பட்ட பகுதிகள் சரஸ்வதி நதிக்கரைகளில்    இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . இதன் மூலம் 1920 ல் சார்.ஜான் மார்ஷல்  கண்டுபிடித்தது சிந்து சம வெளி நாகரிகம் இல்லை அது சரஸ்வதி சிந்து நாகரிகம்  என்றே  அழைக்கப்பட வேண்டும்  என்று  எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது மறைந்த சரஸ்வதி நதியை மிண்டும் ஓட வைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.        



சரஸ்வதி நதியின் கண்டுபிடிப்பு பல கேள்விகளுக்கு விடை தரும் வண்ணம் உள்ளது.ஆரிய படையெடுப்பு   என்ற  ஒன்று இந்தியாவில்   நடைபெறவில்லை மாறாக  சரஸ்வதி நதி வறண்டதால் சரஸ்வதி-சிந்து சமவெளி மக்கள்   கங்கை மற்றும் யமுனை    நீர் கரைகளுக்கு புலம் பியர்ந்தனர் என்று நம்மால் எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது.அதுமட்டும் இன்றி பாரத நாட்டவர்  வேதங்களில் தங்களை தாங்களே ஆரியர் என்று அழைத்ததும்  புலனாகிறது மேலும் இதன்  மூலம் ஆர்யா-திராவிட மோதல் கட்டு கதைகள்  பிசுபிசுத்து போகும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.இந்த சூழ்நிலையில் கடல் ஆய்வாளர்  Dr.ராவ், கிருஷ்ண புராணத்தில் கூறியுள்ள துவாரகா   என்ற கடற்கரை நகரம் கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் இந்திய  இதிகாச புராணங்கள் வெறும் கட்டுக்கதையே  என்ற வாதம்  முற்றுப்பெரும். மெசொபோடோமிய(Mesopotamia) நாகரிகம் தான் உலகின் பழமையான வளர்ந்த  நாகரிகம் என்ற கூறப்பட்டாலும் அதற்கு   இணையான அணைத்து அம்சங்களும் மொழி , கலை மற்றும்   ஆயுதங்களில் அதைவிட   சிறந்த தன்மையும்  கொண்டதுதான் சரஸ்வதி சிந்து நாகரிகம். சரஸ்வதி சிந்து நாகரிக ஆராய்ச்சிகள்  தொடர்ந்து வருவதால் மேலும்  பல ஆதாரங்கள்  கிடைக்க கூடும்.எனவே உலக முன்னோடி கலாச்சார அமைப்புகளில்  சரஸ்வதி சிந்து நாகரிகம் முதன்மையானது என்பதில் இனி நமக்கு எந்த சந்தேகங்களும் வேண்டாம்   



     இனி நீங்களும் உங்கள்   கைகளை உயர்த்தி புஜங்களை மடித்து சொல்லுங்கள் நாம் தான் இந்த உலகின் சிறந்த  கலாச்சார மூத்தக்குடி  என்று !!!     

Saturday 15 May 2010

வந்து விட்டது இந்திய ப்ரௌசெர் EPIC


உலகில் உள்ள பல மென்பொருள் நிறுவனங்களில் இந்தியன் வேலை செய்து , மென்பொருள்களை அவர்கள் நாட்டு பாணியில்   அவர்கள் நாட்டு மொழிக்கு உற்பத்தி செய்து வந்தனர். இதனால் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கொழுத்த லாபம் அடைந்தன.இதை பாருங்கள்! உலகில் உள்ள அணைத்து மென்பொருள்களின் வடிவமைப்பிற்கு பின்பும் நிச்சியம் பல இந்தியர்களின்   உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த இந்தியர்களுக்கு ஒரு பிரத்யக வலை உலாவி (Web  Browser ) இல்லை .இதை இந்தியனுக்கு ஒரு அவமானமாகவே நான் கருதுவேன் ! 

ஆனால் இதற்கு தீர்வாக ஹிட்டன்  ரேப்லெக்ஸ் (Hidden Reflex) என்ற பெங்களுருவை சேர்ந்த ஒரு நிறுவனம், இந்தியாவில் இந்தியனுக்காக இந்திய மொழிகளில் உலவும் (Browsing on Indian languages ) ஒரு சிறப்பான உலாவியை (Browser ) எபிக் ப்ரௌசெர் (Epic Browser) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்டது. என்போன்றவர்களின் மொழியல் சொன்னால் இது ஒரு சுதேசி மென்பொருள். 

எப்போதும் போல internet explorer 
போல் வராது , google chrome போல் இருக்காது என்று சித்தாந்தங்கள் பேசி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஜால்ரா தட்டாமல் , எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) பயன்படுத்தி இந்திய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளியுங்கள் .மேலும் அதில் ஏதேனும் குறை இருந்தால் அதை அந்த நிறுவனதிற்கு தெரிவிப்பதன் மூலம் , எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) மேலும் சிறந்த உலாவியாக (Browser ) மாற்ற முடியும் . 

நம்மை அனைத்திலும் முந்தும் சீனா தன் நாட்டிரிக்கான பிரத்யக வலை உலாவியை   (Browser ) அறிமுகம் செய்து பயன்படுத்தி வருகிறது . நாமும் எபிக் ப்ரௌசெரை (EPIC Browser ) பயன்படுத்தி அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை  பறைசாற்ற வேண்டும்.

Picture

Thursday 6 May 2010

மறைக்கபட்ட சிம்மம்


Picture

சுதந்திர  தினத்தன்று காந்தியின், நேருவின் அல்லது நேதாஜியின் புகைப்படங்களை பத்திரிக்கைகளிலும்,தொலைக்காட்சிகளிலும்  காணலாம்.  காரணம் ! அவர்கள் சுதந்திர இந்தியாவிற்காக பாடுபட்டவர்கள், பல தியாகங்கள் செய்தவர்கள் .இதில் ஏதேனும்  தவறா என்றல்! நிச்சியம்  இல்லை.ஆனால் இதில் மிகப்பெரிய குறை உண்டு, சில தலைவர்களை மட்டும் முன்னிறுத்தி நம் சுதந்திர வரலாற்றை சுருக்குவது நம் சந்ததியனருக்கு செய்யும்  மிகப்பெரிய வரலாற்று மறைப்பு.அது சுதந்திர இந்தியாவிற்காக உழைத்த பல உத்தமர்களுக்கு செய்யும் துரோகம்.

சுதந்திர இந்தியாவிற்கு உழைத்த,உதிரத்தை உதிர்த்த பல தலைவர்களை பட்டியலிட முடியும். அதில் பலராலும் பெயர் மட்டும் அறியப்பட்ட, சுதந்திர  இந்தியாவின் கதவுகளை திறந்துவிட்ட ஒரு ஒப்பற்ற தலைவரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சுதந்திர  இந்தியா , என்ற கனவு பல இந்தியர்களுக்கு கனவாகவும் , ஒரு புதிராகவும் இருந்த தருணத்தில், ஒரு சிங்கத்தின் குரல் கேட்டது !  "சுதந்திரம்  எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன் " என்று அந்த சிம்மத்தின் குரல் வானை பிளந்து கர்ஜனை செய்தது. அந்த சிம்ம குரலுக்கு சொந்தக்காரர் தான் திரு.லோகமான்ய  பால கங்காதர திலகர். அவர் கருதுக்களை கேட்டாலே சுதந்திர  தாகமெடுக்கும்! அவரை பற்றி  படித்தாலோ நம் ரத்தத்தில் சுதந்திர  சூடேறும்! அவரை பற்றி சில செய்திகளை இங்கே பகிர்வோம் .

1856 ஆம் ஆண்டு இரத்தினபுரியல் (மகாராஷ்டிரா)  ஓர் சாதாரண குடும்பத்தில் திலகர்  பிறந்தார். தமது கடும் முயற்சியால் வழக்கறிஞராக  உயர்ந்தார். கணிதம், வானசாஸ்திரம், சமஸ்கர்தம், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் தனித்துவம் பெற்று விளங்கினார். இந்திய மக்களுக்கு தேவை சிறந்த கல்வி, அதுவே அவர்களை சுய சார்புடையவர்களாக மாற்றும் என்று  கருதி   அதை மெய்பிக்க ஒன்றிணைத்த கல்வி சங்கத்தை தோற்றுவித்து பல இளைஞர்களுக்கு  தேசிய கல்வி வழங்கினார். கேசரி என்ற பத்திரிக்கை    மூலம் மக்களுக்கு  சுதந்திரத்தின்  தேவையையும் , நம் நாட்டின் பண்டைய பெருமைகளையும் எடுத்துரைத்தார். "அரசு தலையில்லா முண்டமா ?" , "ஆட்சி செய்வது பழிவாங்க அல்ல " போன்ற கேசரி பத்திரிக்கையின் தலையங்கங்கள் ஆங்கில அரசையே உலுக்கியது. அதற்கு மேலாக கேசரியை ஆங்கில குள்ள நரிகளின் முகத்திரையை  கிழிக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தினார் .

சுதேசியம் என்ற சிந்தனையை முதலில் தீவிரமாக கையிலே எடுத்தவரும்    திலகரே ! இந்தியாவின் பெருமை அதன் சுதேசியமே என்று கிராமம் கிராமமாக எடுத்து சொல்லி சுதந்திர தாகமூட்டினார். இந்தியாவை சுதந்திர பாதைக்கு அழைத்து சென்ற, உலகையே வியக்க வைத்த இந்திய விடுதலை  போராட்டத்தை  வழிநடத்தியது  இவரின் நாற்கர  கொள்கையே  !

1.    அந்நிய பொருட்களை மறு
2.    தேசிய கல்வி பயில்
3.    சுய ஆட்சி அமை
4.    சுதேசியம் கடைபிடி

என்ற அவரின் தத்துவங்கள் இந்தியாவை ஒரு புதிய மக்கள் புரட்சிக்கு ஈட்டு சென்றது . " நம்மிடம் ஆயுதங்கள் இல்லை அது நமக்கு தேவையுமில்லை , ஆனால் நம்மிடம் உள்ள மிகப்பெரிய அரசியல் ஆயுதம் புறக்கணிப்பு. உங்கள் சக்திகளை ஒன்று  திரட்டுங்கள் பிறகு செயலில் இறங்குங்கள் , நம் கோரிக்கைகளை யாரும் ஒதிக்கி விட  முடியாது " ,என்ற திலகரின் உறுமல் பலரிடம் சுதந்திர வேட்கையை பற்ற   வைத்து கொழுந்து விட செய்தது.

நாம் நினைப்பது போல் காங்கிரஸ் கட்சியொன்றும் இந்திய விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சி அல்ல! ஆங்கில ஆட்சிக்கு உதவிபுரியும் சில ஜமின்தார்களையும், செல்வந்தர்களையும் கொண்டு   ஹும்(HUME) என்ற வெள்ளையரால் தொடங்கப்பட்ட கட்சி தான் காங்கிரஸ். முதலில் அது ஆங்கில அரசின் ஜால்ரா கூட்டமாகவே இருந்தது.பின்பு அது விடுதலை இயக்கமாக மாற பல தலைவர்கள் பாடுபட்டனர் அதில் மிக மிக முக்கியமானவர் திலகர். காங்கிரஸ் கட்சி மிக சாதுவான நடைமுறையை கையாண்டு ஆங்கில ஆட்சிக்கு  பெரிய எதிர்ப்புக்கள் தெரிவிக்காத நேரத்தில் திலகர் சுயாட்சி நம் உரிமை என்று கொந்தளித்தார். இது கட்சியில் பிளவை ஏற்படுத்தியது , உண்மையான சுதிந்திர வேட்கை கொண்ட பலர்      திலகரின் பின்னால் அணிவகுத்தனர். பின்பு இதுவே  ஒருங்கிணைத்த சுதிந்திர போராட்டமாக உருபெற்றது. திலகரே முதல்  ஒருங்கிணைத்த சுதிந்திர போராட்ட  தலைவராகவும் போற்றப்பட்டார் .

காந்தியடிகளின் அரசியல் குரு கோபால கிருஷ்ணா கோகுலே என்றாலும் காந்தியின்  சுதேசிய கொள்கைகள், காதி போன்ற கோட்பாடுகள் திலகரிடமிருந்து பெற்றதே!   மகாத்மாவுக்கே மகா உன்னத கருத்தகளை தந்த திலகர் இன்றைய நிலையில் வெறும் பெயரளவில் அறியப்படுவது வெட்ககேடான நிலையே !  இதற்கு காரணம் , நான் முன்னர்  சொன்னதுபோல் சில தலைவர்களை மட்டும்  கொண்டு நம் சுதிந்திர வரலாற்றை சுருக்க முயல்வதே.

இந்தியாவின் வரலாற்றையும், பண்பாட்டையும் பரப்ப வேண்டிய ஊடகங்களோ பணத்தாசை பிடித்து அலைகின்றன. சமூக பொறுப்புள்ள ஊடகங்களான தொலைக்காட்சிகள்  சுதிந்திர தினத்தன்று நாட்டுக்கு உழைக்கும் கவர்ச்சி நடிகைகளின் பேட்டிகளையும்,செக்கிழுத்த நடிகர்களின் செயல்பாடுகளையும் ஒளிபரப்பி  நேரத்தையும், இளைஞர்களின் ஆற்றலையும்  பாழாக்குவது மேலும் வேதனையே !  

இந்த 64 வது சுதந்திர தினத்தன்று நாட்டுக்கு உழைத்த பல தலைவர்களின் வரலாறையும் , நம் நாட்டின் பண்டைய நடைமுறைகளையும் அறிந்து கொள்வதே அந்த தினத்துக்கு நாம்  செய்யும் சிறப்பு .

Sunday 14 February 2010

சர்தார்ஜிகளை அவமானபடுத்தாதீர்கள்


யார் இந்த சர்தார்ஜிகள் 
சீக்கிய மதத்தை சேர்த்தவர்கள் பொதுவாக தங்கள் பெயரின்  பின்னால் சிங் என்ற அடைமொழியை சேர்த்துக்கொள்வர்கள்,இது அவர்களின் மதக்கோட்பாடு. இவர்களே சர்தார்ஜிகள்   என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா நாட்டை அந்நியர்களிடம் காக்க ஒரு மதமே தன் குருமாருடன் சேர்ந்தது  என்றால் அது சீக்கிய மதமாக மட்டுமே இருக்க முடியும்.அந்நியர் என்றவுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று எண்ணிவிட வேண்டாம்,அதற்கு முன்பும் பல அந்நிய அடக்குமுறைகளை வீரமுடன் எதிர்த்தவர்கள் இந்த சீக்கியர்கள். சீக்கிய மதமே 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியதுதான் , தோன்றிய நாள் முதல் இன்று வரை இந்த நாட்டை காக்க அவர்கள் உழைத்து வருகிறார்கள்.மொத்தத்தில் கிரேக்கத்தில் எப்படி ஸ்பார்டன் வீரர்கள் இருந்தார்களோ , அதபோல் இந்தியாவில் சிங்குகள்(சர்தார்ஜிகள்) இருந்தார்கள் .

சர்தார்ஜிகள் எப்படி கேலிப்பொருளானார்கள்      


அந்நிய அடக்குமுறையை எதிர்ப்பதை மத நோக்கமாக கொண்ட சீக்கியர்கள் ஆங்கிலேயர்களையும் எதிர்த்தனர். இயற்கையாகவே உடல் வலிமை பொருந்திய சீக்கியர்களை அடக்க ஆங்கிலேயர்கள் பெரும் கடினப்பட்டனர். என்றுமே பிரித்தாலும் மனோபாவம் கொண்ட ஆங்கிலயர்கள், சர்தார்ஜிகளின்  உடல் வலிமையை மையப்படுத்தி அவர்கள் புத்தி இல்லாதவர்கள் , மடையர்கள் என்ற என்னத்தை வளர்க்கும் வகையில் அவர்களை பற்றிய நகைச்சுவை துணுக்குகளை பத்திரிக்கைகளின் வாயிலாக சர்தார்ஜி ஜோக் என்று அச்சடித்து அவர்களை கேலிப்பொருளக்கினர்.அன்று தொட்டு இன்று வரை சர்தாஜி ஜோக் என்று இந்தியா பத்திரிக்கைகள் கூட தொடர்ந்து போடும்படி செய்துவிட்டனர். நாமும் வடிவேல் போல " வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் டா " என்று தொடர்ந்து சர்தார்ஜி ஜோக்குகளை பரப்பிவருகின்றோம்.


நாம் எப்பேர்பட்ட மடையர்கள்


ஆங்கில ஆட்சியில் , சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில் மொத்தம் 121 பேர் தூக்கிலிடப்பட்டனர் , அதில் 93 பேர் சீக்கியர்கள் ,இதிலிருந்தே அவர்களின் தியாகமும், நம்  நாட்டின் மீதான பற்றும் புலப்படும். உலகையே உலுக்கிய ஜாலியன் வலாபக் படுகொலை சீக்கியர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதே !


இந்தியா இளைஞர்களின் வீர திருமகனாக திகழும் பகத் சிங்கும் கூட  ஒரு சர்தார்ஜியே !   சர்தார்ஜிகளின் வீரம் இந்தியா வரலாறு முழுவதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .இன்றும கூட இந்திய ராணுவத்தில் அதிக   சீக்கியர்கள்  உள்ளனர். எனவே நம் நாட்டிற்கு உழைக்கும் ஒரு வர்க்கத்தை இழிமை படுத்துவது மிக மிக கேவலமான காரியம். இனிமேலாவது சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லாமல், அவற்றை பரப்பாமல் சர்தார்ஜிகளின் மகிமையை பரப்புங்கள், மேலும் யாராவது அவர்களை அவமதிக்கும் செய்திகளை பரப்பினால் அவற்றை தடுங்கள் .
பணம் வாங்கி படத்தில் நடிக்கும் திரைப்பட நடிகர்களை  வெக்கமில்லாமல் தலைவர் என்று சொல்லுவதும் ,அவர்களின் திரைப்பட செய்திகளையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளையும் மின் அஞ்சல் வழி பரப்பும்  எத்தனையோ முட்டாள்களையும், அறிவிளிகளையும் காண்கின்றோம்.பணம் வாங்கி மக்களை ஏமாற்றும் நடிகர்களை தலைவர்கள் என்கிறோம் நாட்டுக்காக உழைக்கும் நம்மவர்களை (சர்தார்ஜிகளை)முட்டாள்கள் என்று செய்தி பரப்பிவருகிறோம்.நாம் எப்பேர்பட்ட மடையர்கள்!!!!!
சர்தார்ஜிகளை பற்றி நகைச்சுவை துணுக்குகளை பரப்புவது நம் ரத்தத்தை நாமே அசுத்த படுத்துவதற்கு  சமம் .வேறு எந்த நாட்டிலும் அவர்கள் நாட்டவரை அவர்களே கேலி செய்வதை கேள்விபட்டதுண்டோ !!!!    
சிந்தியுங்கள்  ! செயல்படுங்கள் !